
ரயில் சேவையில் சிறிய தாமதம் ஏற்பட்டால், அதனால் பாதிக்கப்படும் நிலையங்களில் மட்டுமே தகவல் வழங்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் அல்ஜூனிட் (Aljunied) நிலையத்திற்கு அருகே ஏற்பட்ட தாமதம் குறித்து இணையத்தில் முன்கூட்டியே தகவல் வழங்கப்படவில்லை என்பதால் சில பயணிகள் அதிருப்தி தெரிவித்தனர். இதற்கான விளக்கத்தையே ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதில், தாமதம் 30 நிமிடத்திற்குள் தீர்ந்து விடும் என அதிகாரிகள் கணித்தால், சம்பந்தப்பட்ட நிலையங்களுக்கு மட்டும் அறிவிப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அனைத்து நிலையங்களுக்கும் தகவல் வழங்குவது, தாமதத்தால் பாதிக்கப்படாத பயணிகளும் தேவையற்ற மாற்றங்களைச் செய்து சிரமப்பட வேண்டிய நிலையை உருவாக்கக்கூடும் எனவும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
சமீபத்திய சம்பவத்தில், அல்ஜூனிட் அருகே தடத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக லெவண்டர் (Lavender) மற்றும் பாயா லேபார் (Paya Lebar) இடையே 20 நிமிட ரயில் தாமதம் ஏற்பட்டது.
